வெல்லம்பிட்டிய முக்கொலை குறித்து 25பேரின் வாக்குமூலங்கள் பதிவு – பொலிஸார்

கொழும்பு – வெல்லம்பிட்டிய, கித்தம்பஹுவ பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்தமை தொடர்பில், 25பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் கொலையாளிகளின் பெயர்கள், அங்க அடையாளங்கள் போன்றவை பற்றிய தகவல்களைத் தந்துள்ளதாகவும் அந்தத் தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், வெல்லம்பிட்டிய பிரதேசத்தை உலுக்கிய இந்த முக்கொலைகளின் பின்னர் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையால் விசேட பொலிஸ் குழுக்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.