“வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிப்போம்” என்ற தெலுங்கானா துணை முதல்வருக்கு சிந்து கொடுத்த பதிலடி!

ஹைதராபாத்: வெளிநாட்டு பயிற்சியாளரை நியமித்து சிந்துவை தங்கம் வெல்ல வைப்போம் என தெலுங்கானா துணை முதல்வர் முகமது மஹ்மது அலி கூறிய கருத்துக்கு, சிந்து பதிலடி கொடுத்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் அவரது பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் 22ம் தேதி ஹைதராபாத் திரும்பினார்கள்.

அவர்களுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்று, மாலையில் சிந்துவிற்கும், கோபிசந்திற்கும் பரிசு வழங்கப்பட்டது.

ஹைதராபாத்தில் சிந்துவை வரவேற்க வந்திருந்த தெலுங்கானா துணை முதல்வர் முகமது மஹ்மது அலி செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் சிந்துவிற்கு சரியான பயிற்சியை கொடுக்க விரும்புகிறோம். வெளிநாட்டு பயிற்சியாளரை நியமித்து பயிற்சியளித்து அடுத்த ஒலிம்பிக்கில் சிந்து தங்கம் வெல்லும் சூழ்நிலையை உருவாக்குவோம்” என்றார்.

கோபிசந்த் இந்தியாவிற்கு இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வாங்கி தந்த பயிற்சியாளர் ஆவார். கோபிசந்திடம் பயிற்சி பெற்ற சாய்னா நேவால் கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார். இந்நிலையில் தெலுங்கானா துணை முதல்வர் பேச்சு பெரும் சர்ச்சையாகியது. கோபிசந்த், ஆந்திராவை சேர்ந்தவர் என்பது, இந்த சர்ச்சைக்கு நெய் ஊற்றியது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இதுகுறித்து சிந்துவிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். “எனக்கு கோபி சார் தான் நல்ல பயிற்சியாளர், வேறு எதுவும் சொல்வதற்கு நான் விரும்பவில்லை, இறுதி போட்டியின்போது, ஸ்பெயின் வீராங்கனை, கரோலின் மரின் உண்மையாகவே சிறப்பாக ஆடினார், அது அவருடைய நாள். அடுத்த மாதம் நடைபெற உள்ள சூப்பர் சீரியஸ் போட்டிக்கு தயாராகி வருகின்றேன், என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” “என்று அவர் பளிச்சென கூறி நடையை கட்டிவிட்டார்.

கோபிசந்த் கூறுகையில் ‘அவர் தெரியாமல் கூறியிருக்கலாம். சாதகமான விஷயங்களில் கவனம் செலுத்த இருக்கின்றேன்’ என்று கூறினார்.