வெள்ள நிவாரணம் வழங்க பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரி கைது..

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்திற்காக, வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு பெண்ணிடம் (வயது 24) பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வனாத்தவில்லு பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட கிராம சேவகர் (வயது 41) ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க ஒதுக்கப்பட்ட நிதியை வழங்கவே அவர் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

‘வெள்ள பாதிப்பு குறித்து அறிந்துக்கொள்ள தனது வீட்டுக்கு வந்திருந்த வேளை, பாலியல் இலஞ்சம் கோரி தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார்’ என குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.