மலேசியாவில் வாழும் இந்திய தம்பதியருக்கு சொந்தமான ரயானி ஏர் நிறுவனம் சமீபத்தில் இஸ்லாமியர்களின் அடிப்படை வாழ்க்கை முறையான ஷரியத் சட்டங்களை தழுவிய புதிய விமானச் சேவையை அறிமுகப்படுத்தியது.
ஷரியத் அடிப்படையிலான வசதிகளுடன் அறிமுகமான உலகின் முதல் விமானத்தில் பறக்கும் போதே தொழுகை நடத்தும் வசதி உள்ளிட்ட இஸ்லாமியர்களுக்கு தேவையான பல வசதிகள் அளிக்கப்பட்டது.
ஹிஜாப் எனப்படும் முகத்திரை அணிந்த பணிப்பெண்கள் பயணத்தின் இடையில் ஹலால் வகையான உணவுகளை பரிமாறினர். மது வகைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த விமானச் சேவையில் பல குறைபாடுகள் இருப்பதாக மலேசிய விமானச் சேவை குழும இயக்க அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
கடைசி நேர பயண ரத்து, காலதாமதமான புறப்பாடு மற்றும் விமான பயணத்தின் போது பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக புகார்தாரர்கள் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய மலேசிய விமானச் சேவை குழும அதிகாரிகள் விளக்கம் கேட்டு ரயானி ஏர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
ஆனால் அந்நிறுவனம் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் விமானத்துக்கான அனுமதியை ரத்து செய்து மலேசிய விமானச் சேவை குழும இயக்கம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன் பின்னர் மலேசிய விமானச் சேவை குழும இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏற்கனவே இந்த விமானத்தில் செல்ல டிக்கெட்களை முன்பதிவு செய்திருந்து, பயணம் செய்ய இயலாதவர்கள் தங்களது பணத்தை அந்நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.