ஸ்ரீ.சு.கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் மற்றும் தலைமைத்துவத்தை விமர்சனம் செய்யும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் தொகுதி அமைப்பாளர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்டு அவர்களை தண்டிக்கும் நடவடிக்கைகளை காலம் தாழ்த்த கட்சி தீர்மானித்துள்ளது.

தம்மை கடுமையாக விமர்சனம் செய்வது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் என்பதனால் அவர்களை தண்டிக்ககாது அவர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது அவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்களிடம் கூறியுள்ளார்.

ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து தண்டிப்பதனை விடவும் விமர்சனம் செய்வோரை கட்சியின் கொள்கைகளுக்கு இணங்கச் செய்து ஒன்றிணைப்பது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும் வரையில் மஹிந்த தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியின் கொள்கைகளுடன் இணங்கச் செய்ய முயற்சி எடுக்கப்பட வேண்டும் அவ்வாறு இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.