ஸ்ரீ.சு.கட்சியின் மேலும் முக்கிய பத்து தொகுதி அமைப்பாளர்களின் பதவி பறிபோகும் லட்சணம்..

ஸ்ரீ.சு.கட்சியின் மேலும் பத்து தொகுதி அமைப்பாளர்கள் தங்களது பதவிகளை இழக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் கட்சியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள மீளமைப்பு திட்டங்களின் அடிப்படையில் பத்து தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்…

மத்துகம, ஹொரண, தம்புள்ள, நாவலப்பிட்டி உள்ளிட்ட பத்து தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர் பதவிகளுக்கு எதிர்வரும் நாட்களில் புதியவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தற்போது குறித்த தொகுதிகளில் கடமையாற்றி வரும் தொகுதி அமைப்பாளர்கள் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை.

கட்சியை இரண்டாக பிளவடையச் செய்யும் நோக்கில் இவர்கள் செயற்பட்டு வருகின்றனர். கட்சியின் தலைமையை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

கிராம மட்டத்திலான கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் கட்சி தொடர்பிலும் கட்சியின் தலைமை தொடர்பிலும் குரோத உணர்வை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் செயற்பட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்தானந்த அலுத்கமகே, விதுர விக்ரமநாயக்க போன்ற கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும் தொகுதி அமைப்பாளர் பதவிகளை இழக்க நேரிடும் எனவும் அவர் ஆரூடம் விடுக்கிறார்.