ஹிலாரியின் 3000 மின்னஞ்சல்களை ஆன்லைனில் வெளியிடுகிறது அமெரிக்கா

அமெரிக்காவின் மத்திய நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, ஹிலாரி கிளிண்டனின் 3000 மின்னஞ்சல்கள் பற்றிய விவரங்களை அந்நாட்டு அரசு ஆன்லைனில் வெளியிட உள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலராக ஹிலாரி இருந்த (2009 முதல் 2013 வரை) கால கட்டத்தில் அனுப்பிய மின்னஞ்சல்கள், அவருக்கு வந்த மின்னஞ்சல்கள் என இந்த 3000 மெயில்களை வெளியிட மத்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இக்காலகட்டத்தில் வெளியுறவுத்துறைக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட மின்னஞ்சல்கள் தவிர்த்துவிட்டு, தனது தனிப்பட்ட மின்னஞ்சல்கள் ஹிலாரி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தற்போது மின்னஞ்சல்கள் வெளிப்படையாக வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று அந்நாட்டின் தகவல் சுதந்திர சட்ட இணைய தளத்தில் ஹிலாரியின் 3000 மின்னஞ்சல்கள் இன்று வெளிப்படையாக வெளியிடப்பட உள்ளது.

முன்னதாக ஹிலாரி வெளியுறவுத்துறை செயலராக இருந்த 2012 ஆம் ஆண்டு லிபியாவில் உள்ள பெங்காசி நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல் குறித்து முன்னரே அறிந்து அதை முறியடிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சிகள், இதற்கு ஹிலாரியின் செயல்பாடுகள் தான் காரணம் என்றும் கூறின. இதையடுத்து தான், ஹிலாரி தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் தகவல் பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.