அமெரிக்க அதிபர் தேர்தலில் 2-ம் கட்ட நேரடி விவாதத்திற்கு பின்னர் பொது மக்களிடையே நடத்திய கருத்து கணிப்பில் ஹிலாரி கிளிண்டனை விட டொனால்டு டிரம்ப் 8 புள்ளிகள் பின் தங்கி உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8ம் திகதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப்புக்கும் இடையேயான 2-ம் கட்ட நேரடி விவாதம் முசோரியில் நடந்தது.
அப்போது இருவரும் நேருக்கு நேர் 90 நிமிடங்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஹிலாரி கிளிண்டன் மீது கடும் கோபத்தில் இருந்த டொனால்டு டிரம்ப் அவரை பிசாசு என, வர்ணித்தார்.
ஏனெனில் 2005-ம் ஆண்டு பெண்களை பற்றிய டிரம்ப் இழிவாக பேசிய பேச்சுக்கள் அடங்கிய டேப் சமீபத்தில் வெளியானது. இதனால் பெண்கள் மத்தியில் அவரது செல்வாக்கு சரிந்தது. இதனால் அவர் ஹிலாரி மீது கடும் கோபம் அடைந்தார்.
ஹிலாரி பதவியில் இருந்த போது 20 ஆயிரம் பக்க அரசு இ-மெயில்கள் கசிய விட்ட விவகாரத்தில் நான் அதிபரானால் அவரை ஜெயிலுக்கு அனுப்புவேன் என்றும் தெரிவித்தார்.
இதற்கு ஹிலாரி சரியாக அவருக்கு பதிலடி கொடுத்தார். போரில் உயிரிழந்த வீரர்களை அவமதித்து பேசியது உள்ளிட்டவற்றை வெளியிட்டார். அப்படிப்பட்ட ஆத்திரக்காரரை அதிபராக்கினால் நாட்டுக்கு ஆபத்தாகிவிடும் என எச்சரித்தார்.
இந்த விவாதத்தை தொடர்ந்து ராய்டர்ஸ் மற்றும் இப்சோஸ் நிறுவனம் இணைந்து பொது மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தியது. அதில் ஹிலாரி கிளிண்டன் டொனால்டு டிரம்பை விட 8 புள்ளிகள் முந்தினார் அதாவது டிரம்ப் ஹிலாரியை விட பின் தங்கியுள்ளார்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டன் 45 சதவீதமும் டொனால்டு டிரம்ப் 37 சதவீதமும் பெற்றுள்ளனர். 18 சதவீதம் பேர் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை.