ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை…

பங்களாதேஷில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவோருக்கு பெட்ரோல் விற்பனை செய்ய கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

பங்களாதேஷில் சமீபத்தில் பேருந்து மோதி 2 மாணவர்கள் உயிரிழந்தமை தொடர்ந்து, சாலை வசதியை மேம்படுத்தக்கோரி, தலைநகர் டாக்கா மற்றும் பிற முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் நடைபெற்ற அந்நாட்டு அமைச்சரவை கூட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, தலையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வருவோருக்கு பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டாம் என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் அதிகப்பட்சம் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். மோட்டார் சைக்கிள் ஓட்டுவோருக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமர்வோரும் தலையில் ஹெல்மெட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.