ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் சில பிக்குகள் நடந்து கொண்ட விதமானது, பௌத்த தர்மம், ஒழுக்கத்துக்கு முரணாகும்” என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் சந்திரஜித் ஏ.மாரசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி அமைச்சின் சுங்கக் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,
இனவாதம், மதவாதம், குலபேதம் என்பன மிருகக் குணங்களாகும். இவை மனிதரிடம் இருக்கலாகாது. ஆனால், சிலரிடம் அவை ஒட்டிக் கொண்டுள்ளன.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மிருகக் குணங்களைக் கையிலெடுக்கின்றனர்.
பௌத்த தர்மத்தில் ஒழுக்கத்துக்குத்தான் முதலிடம். ஒழுக்க விழுமியங்களை பின்பற்றுமாறே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சம்பவமானது, கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அங்கு ஒழுக்கம் மீறப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்குள் நுழைவதற்கு முற்பட்டுள்ளனர்.
தாய்குலத்தை மதிக்க வேண்டும். ஆனால், தாயொருவரும் நீதிமன்ற வளாகத்தில் வைத்து தூற்றப்பட்டுள்ளார்.
எனவே, இனிவரும் நாட்களில் ஒழுக்கம் பேணப்பட வேண்டும். பிக்குகளுக்கான ஒழுக்கக் கோவை சட்டமூலத்தில் இவை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.