ஆண்கள் மீதான பெண்களின் வன்புணர்வுக்கு புதிய சட்டம்

பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாதல் மற்றும் வன்புணர்வுக்குட்படுத்தப்படல் போன்றவை தற்போது சமூகத்தில் சகஜமான ஒரு விடயமாகிவிட்டது. என்னதான் தப்புகள் நடந்தாலும் அதற்கென்று அழுத்தமான சட்டம் ஒரு சில நாடுகளிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க, ஆண்கள் மீது பெண்களால் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம் மற்றும் வன்புணர்வுக்குட்படுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு சீனாவில் புதியதொரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. உலகில் பெண்களுக்கு இழைக்கப்படும் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையில், இந்த புதிய சட்டம் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. இந்தப் புதிய சட்டம் குறித்து சீன அரசாங்கத்தின் உத்தியோகப்பூர் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், ஆண் அல்லது பெண் ஆகியோரில் யார் பாலியல் வன்புணர்வு சம்பவங்களில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு 5 வருட கட்டாயச்சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சீனாவில் பின்பற்றப்பட்டு வந்த சட்டத்தின்படி, ஆண்களுக்கு பாலியல் வன்புணர்வு கொடுமைகள் குறித்தான வழக்குகள் தொடரமுடியாத சூழ்நிலையே இருந்தது. அப்படி வழக்குகள் தொடர விரும்பினாலும் வேறு பிரிவுகளின் கீழ்தான் வழக்கு பதிவு செய்ய வேண்டியிருந்தது. இதனால் ஆண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பெண்களுக்கு மிகக்குறைந்த தண்டனையே கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.