(FASTNEWS | COLOMBO) – சிரியாவில் வெடித்த உள்நாட்டு போரால் நிறுத்தி வைக்கப்பட்ட விமானப் போக்குவரத்தை 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நாளை(18) முதல் பயணத்தினை தொடங்க ஈராக் அரசு தீர்மானித்துள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலமையிலான ஆட்சிக்கு எதிராக அங்குள்ள போராளி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2011-ம் ஆண்டில் சிரியாவுக்கு செல்லும் விமானங்களை ஈராக் அரசு நிறுத்தி விட்டது.
இதனால் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஈராக் தலைநகர் பாக்தாத் இடையிலான வான்வழி தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளை(18) முதல் பாக்தாத்தில் இருந்து டமாஸ்கஸ் நகருக்கு முதல் கட்டமாக வாரமொரு விமானம் இயக்கப்படும். படிப்படியாக விமானச் சேவைகள் அதிகரிக்கப்படும் என ஈராக் ஏர்வேஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் லயாத் அல்-ருபாயி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.