12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை

(FASTNEWS|COLOMBO) எத்தியோப்பியாவில் பொதுமக்கள் இணைந்து12 மணிநேரத்தில் 35 கோடியே 36 லட்சத்து 33 ஆயிரத்து 660 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்தனர்.

கிழக்கு ஆப்பிரிக்காவில், மக்கள் தொகை அதிகம் கொண்ட 2-வது நாடாக திகழும் எத்தியோப்பியாவில், வனப்பகுதி அண்மைக்காலத்தில் வேகமாக சுருங்கி வருகிறது.

நாட்டில் நிலவும் வறட்சியை மரங்களால்தான் எதிர்கொள்ள முடியும் என அந்நாட்டு அரசு தீர்க்கமாக நம்புகிறது. எனவே மழைக்காலத்துக்கு முன் 400 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என பிரதமர் அபிய் அகமது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது.

அதன்படி ‘பசுமை மரபு’ என்ற பெயரில் நாடு முழுவதும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. நாட்டில் இருக்கும் அனைத்து பொதுமக்களும் இதில் பங்கெடுக்க வேண்டுமென பிரதமர் அபிய் அகமது வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி ஏராளமான மக்கள் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இதில் 12 மணிநேரத்தில் 35 கோடியே 36 லட்சத்து 33 ஆயிரத்து 660 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்தனர்.