உதயநிதி தலைக்கு 10 கோடி அறிவித்த சாமியாருக்கு சிக்கல்..!

உதயநிதி தலைக்கு 10 கோடி அறிவித்த சாமியாருக்கு சிக்கல்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சனாதானத்தை ஒழிக்க வேண்டும்

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டின் போது சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து உதயநிதியின் சர்ச்சை பேச்சு தொடர்பில் உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தைச் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி தலையை கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். அதுமட்டுமல்லாது உதயநிதியின் தலையை யாரும் சீவவில்லை என்றால் நானே சீவுவேன். அதற்காக வாள் ஒன்றையும் தயாரித்துள்ளேன்.

யாரும் சீவவில்லை என்றால் நானே சீவுவேன்

உதயநிதி தலையை வெட்ட ரூ.10 கோடி போதாது எனில் அந்த தொகையை உயர்த்தவும் தயார் என கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சரை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், வீடியோ வெளியிட்ட பரமஹம்ச ஆச்சார்யா மற்றும் அவரது வீடியோவை X தளத்தில் பதிவிட்ட ஐடியின் பயனாளர் பியூஸ்ராய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி திமுகவின் மதுரை மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் தேவசேனன் சார்பில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் இருவர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் மதுரை மாநகர சைபர் கிரைம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.