
டிச. 04 இல் 120 பேர் 3 படகுகளில் புறப்பட்டோம்: மியன்மார் அகதிகள்
– 2 குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் வழியில் மரணம்
– 103 பேரும் திருகோணமலையில் மீள தங்க வைப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
கொழும்பு, மிரிஹான தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்ட, மியான்மார் நாட்டு ரோஹிங்கிய அகதிகள் 103 பேரும், கந்தளாய் பகுதியில் வைத்து மீண்டும் திருகோணமலைக்கு திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளனர்
திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இவர்கள், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, பொலிஸ் பாதுகாப்புடன், நேற்று சனிக்கிழமை (21) காலை 6.45 மணி அளவில், இரு பஸ்களில் மிரிஹான தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வாறு கொழும்பு நோக்கி அழைத்துச் செல்லப்பட்ட இவர்களை, மிரிஹான தடுப்பு முகாமிலிருந்து கிடைத்த தகவலை அடுத்து, கந்தளாய் பகுதியில் வைத்து இவர்கள், மீண்டும் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி விடுமுறை தினங்களாக இருப்பதால், மிரிஹானா தடுப்பு முகாமில் இவர்களுக்கான போதிய வசதிகளை செய்ய முடியாத நிலை இருப்பதாக, அங்கிருந்து கிடைத்த தகவலை அடுத்தே அவர்களை தற்காலிகமாக மீண்டும் இங்கு தங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
இதேவேளை, குறித்த அகதிகளை மியன்மாரில் இருந்து ஏற்றி வருவதற்கு படகோட்டிகளாக செயற்பட்ட மியன்மார் நாட்டுப் பிரஜைகள் 12 பேருக்கும் எதிராக குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 14 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் அப்துல் சலாம் சாஹிர் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
கடந்த 2024 டிசம்பர் 19ஆம் திகதி வியாழக்கிழமை மாலை திருகோணமலையை வந்தடைந்த மியன்மார் நாட்டு படகிலிருந்த 115 அகதிகளும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) ஆஜர்படுத்தப்பட்டபோதே, பதில் நீதவான் அப்துல் சலாம் சாஹிர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மேலும், படகில் கொண்டுவரப்பட்ட, 103 மியன்மார் நாட்டுப் பிரஜைகளையும் கொழும்பு மிரிஹானா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறும் நீதிபதியால், உத்தரவிடப்பட்ட நிலையிலேயே இவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எனினும், மிரிஹான தடுப்பு முகாமில் இருந்து, இவர்களைப் பொறுபெடுப்பதற்கு, அனுமதி கிடைக்காமையினால், மீண்டும் இவர்கள், திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை திருகோணமலை பிரதேச செயலகம் செய்து வருவதாகவும், மீண்டும் இவர்கள் நாளை (23) திங்கட்கிழமை மிரிஹானா தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் திருகோணமலை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எச்.எம். றியாத் தெரிவித்தார்.
இதேவேளை, திருகோணமலை தி/ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள மியன்மார் ரோஹிங்கிய அகதிகளின் நலன் பற்றி விசாரிக்கவும் அவர்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (21) குறித்த பாடசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன் போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் உட்பட பலரும் கலந்து கொண்டதுடன் ஒரு தொகை அத்தியாவசிய பொருட்களை ரிஷாட் பதியுதீன் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளரிடம் கையளித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ரிஷாட் பதியுதீன் மியன்மார் அகதிகளின் விடயங்களை ஆராய்ந்து உதவிகளை வழங்கியுள்ளோம். அவர்கள் பொலிஸாரின் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளதால், நேரடியாக சென்று பார்வையிட முடியாது என அரசாங்கம் சொல்வதாக சொன்னார்கள். இருந்த போதிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான உறங்குவதற்கான வசதிகளை செய்துள்ளோம். இது போன்று திருகோணமலை வர்த்தக சங்கமும் பல உதவிகளை செய்துள்ளனர் என்றார்.
மியன்மார் நாட்டிலிருந்து புறப்பட்டு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கடந்த வியாழன் (19) கரை ஒதுங்கிய மியன்மார் படகுடன் அகதிகள், வெள்ளிக்கிழமை (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
குறித்த படகில் பயணித்த 115 பயணிகளும் அஷ்ரப் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு குருதி மாதிரிகள் பெறப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களில் கர்ப்பிணித் தாய் ஒருவர் உட்பட 39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும், அடங்குகின்றனர்.
அஷ்ரப் இறங்கு துறைக்கு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அர்ஜுன் அரியரெட்ணம் நேரில் சென்று விசாரணைகள் மேற்கொண்டிருருந்தார். மாலை இவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்களுக்குத் தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உட்பட அரச திணைக்களங்களும், பொலிசாரும், தொண்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றார்கள்.
மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்தோம். எம்மை ஐ.நா.நிறுவனம் பாராமரித்து வந்தது. மியன்மாரில் இருந்து ஐ.நா.நிறுவனம் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் வெளியேறிவிட்டது.
இதனால் அங்கு வாழமுடியாத சூழ்நிலை எமக்கு ஏற்பட்டது. இந்நிலையில் இலங்கைக்கு செல்ல முடிவெடுத்தோம் என்று அகதிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கு வருகை தரும் நோக்கில் மூன்று படகுகளில் 120 பேர் வருகை தந்ததாகவும் இடைநடுவே இரண்டு படகுகள் பழுதடைந்ததாகவும் இதனால் ஒரு படகில் மற்றைய படகில் வந்த நபர்களும் சேர்ந்து பயணித்ததாகவும் குறிப்பிடுகின்றனர். அத்துடன் வரும் வழியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஐந்து பேர் பசியினால் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் அந்து குடும்பத்தில் ஒரு சிறுமி உயிர் தப்பி தம்முடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கு வருவதற்காக தங்களுடைய சொத்துகளை விற்று தங்கள் நாட்டின் பெறுமதியில் ஒவ்வொருவரும் எட்டு இலட்சம் ரூபாய் வழங்கி படகினை கொள்வனவு செய்து கடந்த டிசம்பர் 04ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா குறித்த நபர்களை பார்வையிட்டு அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக அரச அதிகாரிகளுடனும் பொலிசாருடனும் கலந்துரையாடியிருந்தார்.