கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 சந்தேக நபர்களை மேலும் வரும் 4ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்கள் இன்று இணையவழி ஊடாக கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த சம்பவத்தில் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்ட மீகமுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும், இந்த படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட வேண்டிய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்தனர்.

அந்த சந்தேக நபரான பெண் தனது தொலைபேசி மூலம் மூன்றாவது சந்தேக நபருக்கு இரண்டு துப்பாக்கிகள் தொடர்பான புகைப்படங்களை அனுப்பியிருந்ததாகவும், அவை அவரால் நீக்கப்பட்டிருந்ததாகவும் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறினர்.பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் அந்த புகைப்படங்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.அந்த புகைப்படங்களில் உள்ள துப்பாக்கிகளில் ஒன்று இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும், மற்றொரு துப்பாக்கி குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 55 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அரச நிறுவனங்களிடமிருந்து மேலும் 25 சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய அதிகாரிக்கு எதிராக நேரடி சாட்சியங்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், சந்தேக நபர்களை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரினர். முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபர்களை மீண்டும் வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

COMMENTS

Wordpress (0)