
உலக வங்கிக் குழுவின் தலைவர் பிரதமருடன் சந்திப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்கா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு மே 7 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக பேணுவது குறித்து கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
இலங்கை முகம்கொடுத்த அண்மைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உலக வங்கி வழங்கிய ஆதரவிற்காக உலக வங்கிக் குழுவின் தலைவருக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பேண்தகு அபிவிருத்திக்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்தும் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த முறைமையைப் பாராட்டிய உலக வங்கி குழுமத் தலைவர் திரு. பங்கா, பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வேலை தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
சுகாதாரம், கல்வி, விவசாயம், சுற்றுலா மற்றும் உற்பத்தித் தொழிற்துறைகள் போன்ற முக்கியமான துறைகளில் முதலீடு செய்வது குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக விவசாயம் மற்றும் அதன் முக்கிய துறைகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் சாத்தியக்கூறுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் திரு. பங்கா தனது கருத்துக்களை தெரிவித்தார்.
புத்தாக்கம் மற்றும் உற்பத்தித்திறனுக்காக இந்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்வதை இலங்கையும் ஊக்குவித்தது.
வளர்ந்து வரும் தொழிற் துறைகளின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வகையில் சுகாதாரக் கொள்கையை வலுப்படுத்தவும், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியை விரிவுபடுத்தவும் அரசாங்கம் தொடர்ந்து பாடுபட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் உலக வங்கிக் குழுவின் விசேட ஆலோசகர் ட்ரெவர் கின்கெய்ட், மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான துறை பணிப்பாளர் டேவிட் சிஸ்லன், மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கான தேசிய பணிப்பாளர் கெவோர்க் சர்க்சியன், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் இமாத் ஃபகூரி இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா மற்றும் இலங்கைக்கான மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி.கே.ஜி. ஹரிச்சந்திர, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் பொருளாதார விவகார (இருதரப்பு) பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் தர்ஷன பெரேரா மற்றும் அவ் அமைச்சின் வெளிவிவகாரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் தம்மிக பிரேமரத்ன ஆகியோர் பங்குபற்றினர்.
2025.05.08