தேசிய காங்கிரஸின் அழைப்பு  காலத்தின் கட்டாயமா,கையறு நிலையா

தேசிய காங்கிரஸின் அழைப்பு காலத்தின் கட்டாயமா,கையறு நிலையா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முஸ்லிம் தேசிய அடையாளத்துக்கான அங்கீகாரமாக சகல கட்சிகளையும் இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்களை இத்தனை காலமும் கேலி செய்த தேசிய காங்கிரஸ் தலைவர், தற்போது முஸ்லிம் கட்சிகளுக்கு விடுத்துள்ள அழைப்பு காலத்தின் கட்டாயமானதா அல்லது கையறு நிலையின் எதிரொலியா?

ஒன்றுபட்டுச் செயற்பட அழைத்த போதெல்லாம் எலி கொழுத்து பூனையைத் திருமணம் செய்ய அழைப்பதாகவே அதாஉல்லா கேலி செய்து வந்தார். தற்போது,நீர்ப்புங்காவில் அவரே இந்த அழைப்பை விடுத்துள்ளதால்,பூனை மெலிந்து ஆண்மை குறைந்ததால்,எலியை திருமணத்துக்கு அழைத்திருப்பதாக ஏளனம் செய்யப்படுகிறது.தேசிய காங்கிரஸ் என்றிருந்தாலும் இதுவரைக்கும் இக்கட்சி அக்கரைப்பற்றின் நான்கு சுவர்களுக்குள்ளேயே முடங்கியிருக்கிறது.தற்போது முடக்கத்தை விடவும் சப்பாணி என்ற அளவுக்கு இறங்கியுள்ள இக்கட்சிக்கு இயங்க முடியாமலாகியுள்ளது.சுமார் இருபது வருடங்களாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்காகவே இக்குதிரைக்கு கொள்ளு கொடுக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா மற்றும் மஹிந்த ஆகியோர் இதற்காகவே இக்கட்சிக்கு அமைச்சு,அந்தஸ்துக்களை கொடுத்தனர். ஆனால், அக்கரைப்பற்றின் அரைவாசி நிலப்பங்கைக் கூட இக்குதிரை இன்னும் ஓடிக் கடக்கவில்லை. இதனால்தான்,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இக்கட்சிக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்குப் பின்வாங்கியதாகவும் ஒரு கதையுண்டு.இந்நிலைமைகளின் விபரீதத்தை இப்போதாவது தேசிய காங்கிரஸ் உணர்ந்திருப்பது திருப்திதான்.

நடைபெறலாமென எதிர்பார்க்கப்படும் மாகாண சபைத் தேர்தலில்,கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக குதிரையின் தலைவரை களமிறக்க ஒரு கட்டியம் கூறப்பட்டிருக்கலாம்.எனினும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில, பூர்வீகத் தளங்களில் (கல்முனை, சம்மாந்துறை, கிண்ணியா, மூதூர்) இந்தக் கட்டியத்துக்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.வெறும் பத்தாயிரம் வாக்குகளுள்ள கட்சிக்கு முதலமைச்சரா?ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முகவெற்றிலைக் கிராமங்களுக்கு எதுவும் இல்லையா?இந்தக் கேள்விகளின் எதிரொலிகள் மு.கா.தலைவரை மௌனிக்கச் செய்துள்ளது.தனிப்பட்ட நட்பை விட கட்சி விசுவாசம் மற்றும் சமூக அபிலாஷைகளுக்கு ரவூப்ஹக்கீம் முதலிடம் வழங்குவாரென்றே எதிர்பார்க்கப்படுகிறது.

COMMENTS

Wordpress (0)