161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று ஆரம்பம்

161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று (02) முதல் ஆரம்பமாகவுள்ளன.

கடந்த மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைவாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இந்த சபைகளின் பணிகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகும்.

ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவொன்றால் பெரும்பான்மை அதிகாரத்தை கொண்ட 161 உள்ளூராட்சி சபைகளின் பணிகளை இன்று ஆரம்பிக்க முடியும் என்றும், ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரம் குறித்து உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் கூடும் உள்ளூராட்சி சபைகளால் தீர்மானம் எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி சபைகளில் ஆளும் கட்சி எடுக்கும் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளுக்கு ஆதரவை வழங்க எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்தார்.

பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை நிறுவ எதிர்க்கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய அதிகாரத்திற்கு இணங்க உள்ளூராட்சி சபைகன் அதிகாரத்தை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்தார்.

COMMENTS

Wordpress (0)