
கெக்கிராவை தெரிவத்தாட்சி அதிகாரிக்கு எதிராக தடை உத்தரவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமீபத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கெக்கிராவை பிரதேச சபைக்கான விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற இடங்களுக்கு பெண் உறுப்பினர்களை நியமிக்கக் கோரி கெக்கிராவை தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி அனுப்பிய கடிதத்தை செயல்படுத்துவதைத் தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (02) இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களான சந்திம கமகே மற்றும் ஐ.எம்.பி.கே. இளங்கசிங்க ஆகியோர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த இடைக்காலத் தடை உத்தரவு ஜூன் 16 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கெக்கிராவை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு நான்கு உறுப்பினர்கள் கிடைத்துள்ளதாகவும், எனினும், அவற்றில் மூன்று போனஸ் உறுப்பினர்களுக்கான தெரிவாகும் என தெரிவத்தாட்சி அதிகாரி கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.
வேட்புமனுப் பட்டியலில் அல்லது முதன்மை வேட்புமனுவில் பெயர்கள் உள்ள பெண் உறுப்பினர்களை விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ் பெறப்பட்ட மூன்று இடங்களுக்கு நியமிக்க வேண்டும் என்று தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தொடர்புடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் விதிகளுக்கு முரணாக விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ் பெறப்பட்ட மூன்று இடங்களுக்கும் பெண் உறுப்பினர்களை நியமிக்க தெரிவத்தாட்சி அதிகாரி எடுத்த முடிவை அறிவிக்கவும், அதை செல்லாததாக்கும் தீர்ப்பை பிறப்பிக்கவும் மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை மேலும் கோரியுள்ளனர்.