
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மட்டக்களப்பு முன்னாள் OIC தடுத்து வைத்து விசாரணை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பிரிவு கோட்டை நீதவானிடம் தெரிவித்துள்ளது.
வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் இருவரின் கொலை மற்றும் சாய்ந்தமருது குண்டுவெடிப்பு உள்ளிட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக முக்கியமான தகவல்களை மறைத்தல், விசாரணையில் தவறான கருத்துக்களை தெரிவித்தல், ஆதாரங்களை மறைத்தல் மற்றும் துல்லியமான உண்மைகளை வெளியிடாதது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்போது 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும், தேவைப்பட்டால் அவரை மேலும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.