
அரச மற்றும் தனியார் பேருந்துகள் ஒரே நேர அட்டவணையில் இயங்கவுள்ளது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளை ஒன்றிணைந்த நேர அட்டவணையின் கீழ் இயக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு – சிலாபம், கொழும்பு – புத்தளம், கொழும்பு – ஆனையிறவு, கொழும்பு – எலுவன்குளம், கொழும்பு – கல்பிட்டி, நீர்கொழும்பு – கல்பிட்டி, கொழும்பு – மன்னார், கொழும்பு – தலைமன்னார், கொழும்பு – குளியப்பிட்டி, கொழும்பு – அனுராதபுரம், கொழும்பு – வவுனியா, கொழும்பு – கிளிநொச்சி, கொழும்பு – யாழ்ப்பாணம், கொழும்பு – காங்கேசன்துறை, கொழும்பு – காரைநகர், கொழும்பு – துணுக்காய் மற்றும் கொழும்பு – நிக்கவெரட்டிய ஆகிய வழித்தடங்களை இந்த கூட்டு நேர அட்டவணை முறையின் கீழ் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (25) நள்ளிரவு முதல் கொழும்பு, பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பேருந்து வளாகத்தில் இருந்து இந்த பயண சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா தெரிவித்தார்.
நான்கரை மணி நேர பயணத்திற்குப் பிறகு, பேருந்து சாரதிகளின் ஓய்வுக்காக பேருந்துகள் நிறுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவகத்தில் சுகாதாரமான உணவு மற்றும் வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.