கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாக சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாக சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், சம்பந்தப்பட்ட சட்டத்தரணி பொலிஸ் மா அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்பட்டாலும், அவ்வாறான உரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியில், சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணி அந்த சந்தர்ப்பத்தில் தொலைபேசி மூலம் பொலிஸ் மா அதிபரைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக காட்டியுள்ளது.

அதில் அவர், “பிரியந்த எனது ஜூனியர் பேட்ச்…”, “பிரியந்தவிடம் சொல்லுங்கள் கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்குள்…”, “பிரியந்தவிடம் என்னை அழைக்கச் சொல்லுங்கள். இல்லையென்றால் பிரியந்தவின் நம்பரைத் தாருங்கள்…” என்று கூறுவது அந்த காணொளி காட்சிகளில் காணப்படுகின்றது.

இதன் மூலம், குறித்த சட்டத்தரணி பொலிஸ் மா அதிபரை நேரடியாக அழைத்து இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒரு தவறான கருத்து சமூகமயப்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக அந்த சட்டத்தரணிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் எந்தவொரு தொலைபேசி உரையாடலும் இடம்பெறவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை

2025.10.10 ஆம் திகதி காலை கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை, சட்டத்தரணி ஒருவர் ஏதோ ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டி, பலத்தை பயன்படுத்திய சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகள் வழக்குப் பொருட்களாகப் பெறப்பட்டுள்ளதுடன், சம்பவம் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் இருந்த சிலரின் வாக்குமூலங்களும் பதிவுசெய்யப்பட்டு, இந்தச் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை தலைமையகப் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்தச் சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியில், சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணி அந்த சந்தர்ப்பத்தில் தொலைபேசி மூலம் பொலிஸ் மா அதிபரைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக காட்டும் வகையில், அவர் “பிரியந்த எனது ஜூனியர் பேட்ச்…”, “பிரியந்தவிடம் சொல்லுங்கள் கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்குள்…”, “பிரியந்தவிடம் என்னை அழைக்கச் சொல்லுங்கள். இல்லையென்றால் பிரியந்தவின் நம்பரைத் தாருங்கள்…” என்று கூறுவது அந்த காணொளி காட்சிகளில் காணப்படுகின்றது. 

இதன் மூலம், இந்த சட்டத்தரணி பொலிஸ் மா அதிபரை நேரடியாக அழைத்து, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒரு தவறான கருத்து சமூகமயப்படுத்தப்பட்டு வருகின்றது. 

ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக அந்த சட்டத்தரணிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் எந்தவொரு தொலைபேசி உரையாடலும் இடம்பெறவில்லை. 

இந்தச் சம்பவம் குறித்து பொலிஸ் மா அதிபர் அறிந்ததன் பின்னர், கல்கிஸ்ஸை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கும், கல்கிஸ்ஸை தலைமையகப் பொலிஸ் பரிசோதகருக்கும் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ள போதும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவு பிறப்பிக்கவில்லை. 

எனினும், பொலிஸ் மா அதிபர் மேற்குறிப்பிட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் போதே, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். 

இந்தச் சம்பவத்தினால் கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. 

அத்துடன் இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சட்டத்தரணிகளும் ஒருவித எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். 

அந்த சந்தர்ப்பத்தில், கல்கிஸ்ஸை நீதவான், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரியை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கல்கிஸ்ஸை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டிருந்தமையே இதற்குக் காரணமாகும். 

மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் பொலிஸ் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக, பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினாலும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

COMMENTS

Wordpress (0)