
கல்கிஸ்ஸை சம்பவத்தின் பொலிஸ் அதிகாரிக்கு பிணை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியை பிணையில் செல்ல அனுமதித்து கல்கிஸ்ஸை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்று (13) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் குறித்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த பின்னர், கல்கிஸ்ஸை நீதவான் பசன் அமரசேன, சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிளை தலா 100,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார்.
சம்பவம் நடந்த நேரத்தில் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, பொலிஸ் தகாத வார்த்தைகளால் திட்டியதாக மற்றொரு பி அறிக்கை மூலம் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மேலும் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்த பொலிஸார், சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இன்னும் நீதிமன்றத்தில் ஆஜராகவோ அல்லது பொலிஸாருக்கு வாக்குமூலம் அளிக்கவோ இல்லை என்று தெரிவித்தனர்.