
நோர்வே வெளிவிவகார அமைச்சர் அரசியல் உறவுகளை புதுப்பிக்க இலங்கை வருகை
நோர்வே – இலங்கை இடையே மீண்டும் அரசியல் உறவுகளை மீளப்புதுப்பித்துக்கொள்ளும் நோக்குடன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று கொழும்பு வந்துள்ளார்.
2005ம் ஆண்டுக்குப் பின்னர் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும்.
இவர் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பல தரப்பினருடன் பேச்சுகளில் ஈடுபடவுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் உள்நாட்டுப் போருக்கு முடிவுகட்டும் அமைதி முயற்சிகளில் நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே, அந்த முயற்சியில் தோல்வியடைந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கையுடன் அரசியல் உறவுகளைப் புதுப்பிக்கவுள்ளது என்று ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.