பியகம உப மின் பரிமாற்றகத்தில் கடந்த 13ம் திகதி ஏற்பட்ட பாரிய வெடிப்புத் தொடர்பில், காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, மின்சார விநியோக தடை தொடர்பான சகல விபரங்களும் எதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று(14) மதியம் அலரிமாளிகையில், பிரதமர் தலைமையில் இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே பிரதமர் மேற்குறித்த பணிப்புரையை விடுத்தார்.
20 வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியாக நீண்ட நேர மின்சார விநியோகத் தடையை பொதுமக்கள் 13ம் திகதியன்று எதிர்கொண்டனர்.
இன்னும், பிற்பகல் 2.30 அளவில் தடைப்பட்ட மின்சார விநியோகம் இரவு 11 மணியளவில் வழமைக்கு கொண்டு வரப்பட்டது.
கடந்த 17 நாள் காலஇடைவெளிக்குள் தொழிநுட்ப பிரச்சினை காரணமாக 2 தடவைகள் நாடளாவிய ரீதியான மின்சார விநியோகத் தடை ஏற்பட்டது.
இதே வேளை , நேற்றைய முன்தினம் இடம் பெற்ற குறித்த மின்சாரத் தடை காரணமாக பொது மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிப்படைந்தமை மற்றும் மக்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள் தொடர்பில் பிரதமர் அரசாங்கம் சார்பில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.