இலங்கையில், இந்தியர்களுக்கு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சிறுநீரக மாற்று வியாபாரம் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச பொலிஸாரின் (இன்டர்போல்) உதவியை நாட இந்திய பொலிஸார் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வியாபாரமானது, சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனாலேயே சர்வதேசப் பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பானவிசாரணைகளை மேற்கொண்டுவரும் இந்தியாவின் ஆந்திர மாநில பொலிஸ் விசேட குழு அறிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்திய மத்திய அரசுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டதன் பின்னர், சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த பொலிஸ் குழு தெரிவித்துள்ளதாக, மேற்படி செய்தியில் மேற்கோள்காட்டி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் குஜராத், பண்டோலி பிரதேசத்தைச் சேர்ந்த சிலர், சிறுநீரக வியாபாரிகள் ஊடாக இலங்கைக்கு வந்து சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என இந்தியப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல்களின் பிரகாரம், இந்தியர்கள் மூவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இதேவேளை, இந்தியப் பிரஜைகளுக்கு இலங்கையில் வைத்து சிறுநீரக மாற்றுச் சிகிச்சை இடம்பெற்ற முறைமை தொடர்பில் விசாரணைகளை, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.