தென்கொரியாவில் பெண்ணொருவரை கூட்டாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவர் குறித்தான விசாரணைகளை இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
குறித்த சம்பவமானது 19 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1998ம் ஆண்டு 18 வயது பலகலைக்கழக மாணவி ஒருவருக்கு இடம்பெற்ற சம்பவமாகும்.
குறித்த மாணவி சம்பவம் இடம்பெற்ற தினம் கொரியாவின் குமா அதிவேக வீதியில் பயணித்துக் கொண்டிருக்கையில் வீதி விபத்துக்கு ஆளாகியுள்ளதோடு, அவரது கீழ் உள்ளாடை பிரிதோர் பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த கரைகளைக் கொண்டு மரபணு மாதிரிகளை பெற கொரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், அது யாருடையது என கண்டுபிடிக்க முடியாது மாதிரிகளை சேமித்து வைக்க அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதற்கிடையே 12 வருடங்களுக்கு பின்னர் அதாவது 2010ம் ஆண்டு கொரியாவில் பணிக்கு சென்ற இலங்கை பிரஜை ஒருவர் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடைய மரபணு மாதிரிகளை ஆராய்ந்த வேளை, 1998ம் ஆண்டு கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணின் ஆடையில் இருந்த DNA மாதிரிகள் குறித்த சந்தேக நபரின் DNA உடன்ஒத்துப் போவது தெரிய வந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் மற்றும் மேலும் இலங்கை பிரஜைகள் மூவர் பல்கலைக்கழக மாணவியினை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்தது.
கொரியாவின் சட்டத்திற்கு அமைய பாலியல் வல்லுறவு குறித்த வழக்கு தாக்கள் செய்யும் கால எல்லை 10 வருடங்கள் ஆகும்.
இதன் காரணமாக இலங்கை வந்திருந்த கொரிய அதிகாரிகள் குழுவொன்று 1998 சம்பவம் குறித்து ஆராயுமாறு கோரிய கோரிக்கைக்கு அமைய தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.