துருக்கியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு அமுல்படுத்தப்பட்ட நாடு தழுவிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
2016 ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட பின் இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
ஏழு முறை அவசர நிலைக் காலம் நீட்டிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு முறையும் மூன்று மாத காலத்துக்கு இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டது.
அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று பதவியைத் தக்கவைத்துக்கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு, தற்போது மீண்டும் அவசர நிலைக் காலத்தை நீட்டிக்கவேண்டியதில்லை என்று அந்த அரசு முடிவு செய்துள்ளது.
அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதில் இருந்து 1.07 லட்சம் பேர் அரசுத் துறை பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சுமார் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அவர்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என்று அதிகாரபூர்வ புள்ளிவிரங்களும், சில அரசு சாரா நிறுவனங்களும் கூறுகின்றன.