2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதத்தில்..

2018ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் இரண்டாம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் செப்டெம்பர் 8ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீர பேச்சு நடத்தவுள்ளதோடு, அதன் பிற்பாடு ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறும் நோக்கிலேயே குறித்த சந்திப்பு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

நிதி அமைச்சர் வரவு, செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றுவதற்காக விசேட நாடாளுமன்ற அமர்வொன்று இடம்பெறவுள்ளது. அதன் பிறகு மறுநாள் வரவு, செலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெறும்.

அதையடுத்து இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று வாக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பின்னர் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்கான குழுநிலை விவாதம் நடத்தப்பட்டு டிசம்பரில் வரவு, செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)