2019ம் ஆண்டுடன் ஓய்வு பெறுகிறார் யுவராஜ் சிங்…

இங்கிலாந்தில் 2019ம் ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியின் பின்னர் ஓய்வு குறித்து அறிவிப்பேன் என இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரரான யுவராஜ் சிங் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. 36 வயதான யுவராஜ் சிங் தற்போது ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் யுவராஜ் சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘2000-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாடி வருகிறேன். ஏறக்குறைய 17 முதல் 18 ஆண்டுகளாக விளையாடி உள்ளேன். நிச்சயமாக 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு எடுப்பேன்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த முறை துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் வலுவானதாக உள்ளது. எங்கள் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதுடன் கோப்பையையும் வெல்ல முடியும் என நம்புகிறேன். 20 ஓவர் போட்டியில் முடிவுகளை கணிக்க முடியாது.

எந்தவொரு அணியும், எந்தவொரு நாளிலும் வெற்றி பெறலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடியதாகும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நன்றாக விளையாடி வருகிறது. ஐபிஎல் போட்டியில் இந்த இரு அணிகளும் சிறப்பானவையாகும்’ என தெரிவித்தார்.

 

####