“தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி தோல்வியடைந்தால் அணித்தலைவரை மாற்றுவது பற்றி சிந்திப்போம்” என இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு குழுத் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இலங்கை அணியின் தலைமை பொறுப்பிலிருந்து அஞ்சலோ மெத்தியூஸை மாற்றுவது தொடர்பில் ஒருபோதும் கலந்துரையாடவில்லையென இலங்கை கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
மேலும் “மெத்தியூஸ் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக்கிண்ண போட்டிக்கு தலைமை தாங்குவார் எனவும், தனது பொறுப்பினை புரிந்துக்கொண்டு மெத்தியூஸ் செயற்படுவார்” என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை அணி தலைமைத்துவம் தொடர்பில் கலந்துரையாட வேண்டிய காலம் இதுவல்ல, தற்போது தென்னாபிரிக்காவுடனான தொடர் இடம்பெற்று வருகின்றது, அதற்கு அனைவரும் மெத்தியூஸிற்கு ஆதரவளிக்க வேண்டும் என அணி தேர்வுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.