(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட உத்தேச 21ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
21ஆம் சட்டமூலம் தொடர்பான விஷேட கலந்துரையாடல் டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அதன் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, இந்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இணக்கம் ஏற்பட்டதாக இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த திருத்தசட்டமூலத்திற்கு தேவையான யோசனைகளையும் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
நாளைய தினம் இடம்பெறவுள்ள சர்வக்கட்சி கலந்துரையாடலின் போது அது தொடர்பான யோசனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச 21 ஆம் திருத்தச்சட்டமூலம் அண்மையில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.