216 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயல் காரணமாக 6 பேர் உயிரிழப்பு…

ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள இஷிகாவா பகுதியில் நேற்று மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய ’ஜெபி’ புயலுக்கு 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியை நோக்கி நகரும் புயலின் எதிரொலியாக பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது

புயல் கடந்து செல்லும் பாதையில் உள்ள அனைத்து பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசாகா நகரில் உள்ள பிரபல படப்பிடிப்புகள் நடைபெறும் யூனிவர்சல் ஸ்டுடியோ, தொழிற்சாலைகள், கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மேலும், நகோயா மற்றும் ஓசாகா நகரில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், சுமார் 800 விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, புல்லட் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் படகு போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் சுமார் 12 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.