முன்னாள் ஜனாதிபதியின் தோல்விக்கு நாம் காரணமில்லை என்று தெரிவித்துள்ள பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் வண. கலகொடஅத்தே ஞானசார தேரர், அவர் விதைத்ததை தற்போது அவரே அறுவடை செய்கின்றார்’ என்று தெரிவித்தார்.
பொதுபல சேன குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கைக்கு, நேற்று செவ்வாய்க்கிழமை (10) கண்டனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
‘நான் வீரவன்சவுக்கு மாத்திரமல்ல, மஹிந்தானந்த அலுத்கமகே, மனுஷா நாணயக்கார, டிலான் பெரேரா, ரஞ்சித் சேனாரத்ன, மங்கள சமரவீர, அரசியல் ஆய்வாளர்களான கெவிந்து குமாரதுங்க மற்றும் தயான் குணதிலக்க ஆகிய அனைவருக்கும் எதிராக சவால் விடுக்கின்றேன்.
குறித்த அறிக்கை தொடர்பாக அவர்களுடன் நேரடி விவாதமொன்றில் ஈடுபடுவதற்கும் நான் தயாராக இருக்கின்றேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘பொதுபல சேனா அமைப்புக்கு நோர்வே நாட்டினால் நிதி கொடுக்கப்பட்டுள்ளது. அது மத்திய புலனாய்வு அமைப்பின் சதித் திட்டமாகும்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
‘அப்படியே நோர்வேயினால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் இதற்கு எதிரான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நிதி கொடுக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கு அதனுடன் தொடர்புடைய ரசீதுகள் இருக்கவேண்டும்.
இலங்கையிலுள்ள அப்பாவி பௌத்த மக்களின் நிதியாலேயே இது அமைக்கப்பட்டது. அவர்களுக்காகவே நாம் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். இது பற்றி அறியாத அமைச்சர்கள், நினைத்ததையெல்லாம் அறிக்கையாக வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர்’ என்று அவர் தெரிவித்தார்.
‘ஜனநாயகம் பொய் செல்லாது. முன்னைய அரசாங்கத்திடம் நாம் என்னவெல்லாம் கலந்துரையாடினோமோ, அவை அனைத்தும் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் செல்லுபடியாகின்றது. எந்த ஒரு அரசாங்கத்திடமிருந்தும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் நாம் பணம் பெறவில்லை.’ என்று அவர் குறிப்பிட்டார்.
( நன்றி – -சத்துரங்க பிரதீப் )