சலாவ இராணுவ முகாம் வெடிப்புக்கு கோத்தவும் மஹிந்தவுமே பொறுப்பு – அகில

சலாவ இராணுவ முகாம் வெடிப்பு சம்பவம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும் என, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவுற்றதும் சர்வதேச நியமங்களுக்கு அமைய குறித்த ஆயுதங்களை நீக்கி இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பிலேயே அகில விராஜ் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

யுத்தம் இடம்பெற்று ஆறு வருடங்கள் கழிந்த பின்னரும் அவற்றை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும், இதன்படி அதன் பொறுப்பு அவர்களால் தட்டிக் கழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவர்களால் குறித்த ஆயுதங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், அவ்வாறு நடைபெறவில்லை என குறிப்பிட்ட அமைச்சர், அவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பின் உத்தியோகபூர்வ எழுத்து மூல ஆவணங்களை வௌியிட வேண்டும் எனவும் கூறினார்.

இதற்கு முன்னதாக, 2009ம் ஆண்டு வவுனியாவிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலை வெடித்ததோடு, 2014ம் ஆண்டும் அதுபோன்றதொரு சம்பவம் இடம்பெற்றதாகவும், எனினும் ஊடகங்கள் அக்காலத்தில் அதனை வௌிப்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அன்று இது குறித்து நடவடிக்கை எடுக்காது இன்று, அவர்கள் முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் கல்வி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.