முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹென்பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர், றகர் வீரர் வஸீம் தாஜூடின் கொலையுடன் ஆரம்பம் முதல் தொடர்புபட்டுள்ளார்களா என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
தாஜூடின் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணைகளில் பங்கேற்ற அரச தரப்பு சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
படுகொலை சூழ்ச்சித் திட்டத்தின் ஆரம்பம் முதலே குறித்த இந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் கொலையின் பிரதான சந்தேக நபர்களுடன் தொடர்பு பேணியுள்ளமை விசாரணைகளில் தெளிவாகியுள்ளது. படுகொலைச் சம்பவம் ஒன்றை வாகன விபத்தாக சித்தரித்து விசாரணைகளை முடிவுறுத்த இந்த இரண்டு பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் காணப்பட்ட தேவை என்ன? சாட்சியாளர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சந்தேக நபரான அனுரசேனாநாயக்க அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றார்.
சம்பவம் தொடர்பிலான சீ.சீ.டி.வி. காட்சிகள் கனேடிய ஆய்வு கூடமொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, எனவே சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட முடியாது.
சட்ட ரீதியான காரணிகளின் அடிப்படையிலேயே பிணை வழங்கக் கூடாது என கோரிக்கை விடுக்கின்றேன் என டிலான் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமது கட்சிக்காரர் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை எனவும், சிறுநீரக நோயாளியான அவருக்கு சிறையில் தடுத்து வைப்பதனால் சிரமங்கள் காணப்படுவதாகவும் பிணையில் விடுதலை செய்யுமாறும் அனுர சேனாநாயக்கவின் சட்டத்தரணி அனில் சில்வா கோரியுள்ளார்.
அரச தரப்பு சட்டத்தரணி தமது கட்சிக்காரரை தூக்கிலிட விரும்பினால் உயர் நீதிமன்றில் சந்திப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமது கட்சிக்காரர் தன்னார்வ அடிப்படையில் சுயமாக வாக்கு மூலம் ஒன்றை அளிக்க விரும்பவதாக சுமித் பெரேராவின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.