25 வயதுக்கு குறைந்தவர்களுக்கு முச்சக்கரவண்டி ஓட்டுவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தடை செய்யக்கோரி, கோரிக்கையொன்றை அரசிடம் கையளிப்பதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக அச்சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொடதெரிவிக்கையில்;
பாடசாலைகளில் கல்வி கற்று வெளியேறும் மாணவர்கள் தமக்கு வயது 18 பூர்த்தியடைந்தவுடன் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு அதிக அக்கறை காட்டுகின்றார்கள்.
இதனால் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதோடு மக்களின் வீதிப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதனை கவனத்தில் கொண்டு வயது 25க்கு குறைந்தவர்களுக்கு முச்சக்கரவண்டி ஓட்டுவதற்கான வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவது தடை செய்யப்பட வேண்டுமென்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மகஜரொன்றை அரசிடம் கையளிக்கவுள்ளோம் என்றும் டாக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
தற்போது 25 வயதிற்கு குறைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முச்சக்கர வண்டி சாரதிக்கான தொழில் புரிவதும் புள்ளி விவரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.