2017ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட யோசனைக்கு அமைய, வாகன போக்குவரத்தில் ஏற்படும் பிரதான தவறுகள் 7க்கான அபராதம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
வாகன போக்குவரத்தில் ஏற்படும் பிரதான தவறுகள் 7க்காக 25,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படுவது குறித்த வரவு-செலவுத் திட்ட யோசனையினை; 30,000 ரூபா தொடக்கம் 50,000 ரூபா வரை உயர்த்துவதற்கான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அபராதம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், மது போதையில் வாகனம் செலுத்துதல், கவனமின்றி புகையிரத கடவையில் வாகனத்தினை செலுத்துதல், செல்லுபடியாகும் காப்புறுதியின்றி வாகனத்தினை செலுத்துதல் போன்ற குற்றங்களுக்கு 25,000 ரூபா இலிருந்து 30,000 ரூபா வரை தண்டப்பணம் அறவிடவும், அவ்வாறே 3 மாதம் தொடக்கம் 10 வருடங்கள் வரையில் சிறையில் அடைக்க, வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்ய போன்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழுவினரின் அறிக்கையானது எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் போக்குவரத்து அமைச்சரால் அமைச்சரவை அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்படவுள்ளது.
நிதியமைச்சின் செயலாளர், போக்குவரத்து அமைச்சின் செயலாளர், நீதியமைச்சின் செயலாளர், மோட்டார் வாகன திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களப் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த ஆணைக்குழுவில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.