
நாமலின் கைதுக்கு பின்னணியில் வசந்த சமரசிங்க – திளும் அமுணுகம குற்றச்சாட்டு
மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் வசந்த சமரசிங்கவின் முறைப்பாட்டுக்கமையவே நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் திளும் அமுணுகம தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சியினரால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “வசந்த சமரசிங்கவின் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட அரசிடம் நாம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம், அதாவது தற்போதைய அரசாங்கத்தில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களும், ஊழல் செய்பவர்களும் அதிகமாக உள்ளார்கள். அவர்களை இனங்கண்டு விசாரணை நடாத்தி கைது செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
28ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சியினரால் கண்டியிலிருந்து மேற்கொள்ளப்பட இருக்கும் மாபெரும் நடைப்பயணத்தை தடை செய்வதற்காகவே நாமலின் இந்த கைது நடவடிக்கை என திளும் குற்றம் சுமத்தினார்.
யாரை எப்படி கைது செய்தாலும் எவ்வாறான கைதுகள் இடம்பெற்றாலும் தமது நடைப்பயணம் உறுதி என அறிவித்தார்.
மேலும், கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் 51 உறுப்பினர்களை கைது செய்தாலும் தமது பயணத்தை தடைசெய்ய முடியாது என திளும் அமுணுகம தெரிவித்தார்.