இரட்டை வாக்கு கோரிக்கையை ஏகமனதாய் ஏற்ற  சோபித தேரர்

இரட்டை வாக்கு கோரிக்கையை ஏகமனதாய் ஏற்ற சோபித தேரர்

சிறுபான்மை கட்சிகளின் இரட்டை வாக்கு கோரிக்கையை, வண. சோபித தேரர் ஏற்றுக்கொண்டமை எங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வெற்றி என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

சிறு மற்றும் சிறுபான்மை கட்சி பேரவைக்கும், விகாராதிபதி சோபித தேரருக்கும் இடையில் நேற்று கோட்டே நாகவிகாரையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து கூறிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது;

உடனடியாக தேர்தல்முறை மாற்ற 20ம் திருத்த வர்த்தமானி பிரகடனத்தை வாபஸ் வாங்குங்கள். அதை வாபஸ் வாங்கியதன் பின்னர் சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் புதிய சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி, இரட்டை வாக்கு முறைமையை தேர்தல் முறை மாற்ற யோசனை திட்டத்தில் உள்வாங்கி, அதை பாராளுமன்றம் கொண்டு சென்று சட்டமாக்குங்கள்.

இந்த இரண்டையும் செய்ய முடியாவிட்டால், இந்த காலாவதியான பாராளுமன்றத்தை உடன் கலைத்து விட்டு, புதிய தேர்தலை, நடப்பு தேர்தல் முறையின் கீழ் நடத்தி, புது பாராளுமன்றத்தை உருவாக்கி, அதில் தேர்தல் சட்டம் உட்பட நாட்டின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் புதிய அரசியலமைப்பை சட்டமாக்குங்கள்.

எங்களுடனான பேச்சுக்களையடுத்து மேற்கண்ட மூன்று கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்ட சோபித தேரர் அரசாங்கத்துக்கு அவற்றை முன் வைத்ததுடன் தொடர்ந்து எம்முடன் இணைந்து பணியாற்ற உடன்பட்டுள்ளார்.

இது எமது சிறு மற்றும் சிறுபான்மை கட்சி பேரவைக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும்.

இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சி தலைவர்கள் சந்திக்க ஏற்பாடாகியுள்ள கூட்டத்தில் இந்த கோரிக்கைகளை எடுத்து கூறவுள்ளோம். எமது சந்திப்பில், சோபித தேரர், அமைச்சர் ரவுப் ஹக்கீம், திஸ்ஸ விதாரண, ரிசாத் பதுதீன், டக்லஸ் தேவானந்த, சிறிதுங்க ஜெயசூரிய, அசாத் சாலி உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.