மனித கடத்தல் கும்பலால் கடத்தப்படும் இளம்பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்படுவதாக அமெரிக்கா மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நடைபெறும் மனித கடத்தல்களின் கொடூரமான உண்மைகளை கர்லா ஜாசின்டோ என்ற இளம்பெண்ணின் கதை உணர்த்துகிறது. மனித கடத்தல் ஒரு லாபகரமான தொழில் என்பதால் மத்திய மெக்சிகோவில் இருந்து அட்லாண்டா மற்றும் நியூயார்க் வரை இந்த துயரநிலை பரவி வருகிறது. கர்லா போன்றே சுமார் 10 ஆயிரம் மெக்சிகன் பெண்களின் வாழ்வை இந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அழித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான கர்லா கூறுகையில், தனது 5 வயதில் தாயாரால் நிராகரிக்கப்பட்டதாகவும், ஐந்து வயது சிறுமியாக இருந்தபோதே உறவினரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
12-வது வயதில் மனித கடத்தல் கும்பலால் குறிவைக்கபட்டதாகவும். பல்வேறு ஜால வார்த்தைகள் கூறி கடத்தப்பட்டதாகவும் ஒருநாளுக்கு 30 ஆண்கள் வீதம் 4 ஆண்டுகள் தான் 43,200 முறை பலவந்தமாக கற்பழிக்கப்பட்டதாகவும் இவர் கூறுகிறார்.
தற்போது 23 வயதாகும் கர்லா, மனித கடத்தலுக்கு எதிராக ஒரு வெளிப்படையான ஆதரவாளராக மாறிவிட்டார். அதனால்தான் தனது கதையை பகிரங்கமாக தெரிவிக்கிறார்.
சில நண்பர்களுக்காக மெக்சிகோவின் சுரங்க ரெயில் நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது ஒரு சிறுவன் இனிப்பு பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்தான். எனக்கு இனிப்பு ஒன்றை சிலர் பரிசாக கொடுக்கச் சொன்னதாக எனக்கு தந்தான். 5 நிமிடங்களுக்கு பிறகு ஒரு வயதானவரின் காரில் நான் இருந்தேன்.
பின்னர், மெக்சிகோ நகரில் சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டு நபர்களிடம் என்னை பாலியல் தொழிலில் அந்த கும்பல் ஈடுபடுத்தியது. அதன் பின்னர் 43,200 நபர்களால் நான் சீரழிக்கப்பட்டேன். அவர்களில் ஒருவர் எனது கதையை கேட்டு அந்த இடத்தில் இருந்து நான் தப்பி வர உதவி செய்தார்.
இதே கதையை வாடிகன் நகரில் போப் ஆண்டவரிடமும் அமெரிக்க பாராளுமன்றத்திலும் தெரிவித்திருந்தார், கர்லா.
இதேபோல், இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் செக்ஸ் அடிமைகளாக மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் சிரியா ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் செக்ஸ் சிறைகளுக்கு விற்கபடுகின்றனர்.
சமீபத்தில் டெல்லியில் இயங்கி வரும் சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு குர்கானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் 2 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து 2 பெண்களையும் மீட்டனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் நேபாள நாட்டை சேர்ந்த தாய்-மகள் என்பது தெரியவந்தது. இதில் தாய்க்கு 44 வயது, மகளுக்கு 20 வயது. அவர்கள் இருவரையும் சவுதி தூதரக அதிகாரி ஒருவர் வீட்டு வேலைக்காக அழைத்து வந்ததும் தெரியவந்தது.
வேலைக்கு வந்த இடத்தில் வீட்டுக்குள் அடைத்துவைத்து அவரும், அவரது நண்பர்களும் பல முறை கற்பழித்தும், அடித்து, உதைத்து நெடுங்காலமாக சித்ரவதை செய்ததும் அந்த பெண்கள் அளித்த வாக்குமூலத்தால் வெளிச்சத்துக்கு வந்தது.
சர்வதேச பெண் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், இதேபோல் இளம் பெண்களுக்கு பணஆசை காட்டி, கடத்திவந்து மத்திய கிழக்கு நாடுகளில் செக்ஸ் அடிமைச் சந்தைகளில் விலைபொருளாக விற்று கொழுத்த லாபம் குவிக்கிறார்கள்.
உலகில் மனித கடத்தலில் தண்டனை பெற்றவர்களில் பத்தில் மூன்றுபேர் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொள்ளை உள்ளிட்ட முக்கிய குற்றங்களிலும் பெண்கள் மிகப்பெரிய பங்கு வகிப்பதாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.