உலகம் முழுவதும் 4681 பேரை கொடூரமாகக் கொல்லப் போவதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இணையதளத்தில் ஒரு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொதுமக்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் 285 பேர் இந்தியர்கள் என்பதால் இந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 4681 பேரும் அப்பாவி பொதுமக்கள் ஆவர்.
மொத்தமாக தேர்வு செய்து பெயர்ப் பட்டியலை இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளது ஐஎஸ்ஐஎஸ். ஆனால் உலக மக்கள் மனதில் அச்சத்தையும், பீதியையும் கிளப்புவதற்காக ஐஎஸ் இவ்வாறு செய்வதாக உளவுத்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் இந்த 4681 பேரையும் கொல்வது சாத்தியம்தான் என்றும் கருதப்படுகிறது. காரணம், கூட்டுத் தாக்குதலாக இல்லாமல் தனி நபர் தீவிரவாதத் தாக்குதல்கள் தற்போது உலகம் முழுவதும் பெருகி வருகிறது. பிரான்ஸிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இத்தகைய தாக்குதல்கள் அதிக அளவில் நடந்துள்ளன. அமெரிக்காவின் ஆர்லான்டோவிலும் கூட சமீபத்தில் நடந்தது இந்த மாதிரியான தனி நபர் தீவிரவாதத் தாக்குதல்தான்.
4681 பேர்
யுனைட்டெட் சைபர் காலிபேட் என்ற ஐஎஸ் அமைப்பின் இணையதளத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 4681 பேரைத் தேர்வு செய்து அதில் அறிவித்துள்ளனர்.
ரேண்டம் தேர்வு
ரேன்டமாக இந்தப் பெயர்களைத் தேர்வு செய்து பட்டியல் வெளியிட்டுள்ளது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு. அனைவருமே சாதாரண பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனி நபர் தாக்குதல்கள்
சிரியாவிலும், ஈராக்கிலும் அதன் அடித்தளம் ஆட்டம் காண ஆரம்பித்திருப்பதால் தனி நபர் தாக்குதல்களை அதிகப்படுத்த ஐஎஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் பட்டியல் அதைத்தான் நிரூபிப்பதாக உள்ளது.
தந்திரச் செயல்
இதுகுறித்து இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில் இது மக்கள் மனதில் அச்சத்தைக் கிளப்ப ஐஎஸ் செய்யும் தந்திரமாகும். தங்களது பெயரை இதில் பார்த்தால் யாருக்குமே பயம் வரத்தான் செய்யும். அதைத்தான் ஐஎஸ் விரும்புகிறது.
குளிர் காய நினைக்கிறது
மக்கள் மத்தியில் பதட்டத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி அதில் குளிர் காய நினைக்கிறது ஐஎஸ் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதேசமயம், இந்தப் பட்டியலில் உள்ள ஒருவரை, தனி நபர் ஒருவர் கொலை செய்து விட்டு, ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு அதை காணிக்கையாக்கினால் அது காட்டுத் தீ போல உலகம் முழுவதும் பரவும் அபாயம் இருப்பதையும் மறுக்க முடியாது என்றும் உளவுத்துறையினர் கூறுகின்றனர்.