அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 88 ஆவது ஒஸ்கார் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. திரைப்படத்துறையில் இருப்பவர்கள் ஒஸ்கார் விருதை தங்களுக்கான உச்சபட்ச அங்கீகாரமாக கருதுகிறார்கள். அதில் லியோனார்டோ டிகாப்ரியோ விதி விலக்கு அல்ல.
லியோனார்டோ டிகாப்ரியோ இதுவரை ஆறு முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் 5 முறை நிராகரிக்கப்பட்ட பிறகு இந்த ஆண்டு ‘தி ரெவெனன்ட்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக டிகாப்ரியோவுக்கு ஒஸ்கார் விருது அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ‘டைட்டானிக்’, ‘டெபார்ட்டட்’, ‘இன்செப்சன்’, ‘தி கிரேட் கேட்ஸ்பை’, ‘ரெவல்யூஷனரி ரோடு’ ஆகிய படங்களுக்காக டிகாப்ரியோ ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஒவ்வொரு முறையும் டிகாப்ரியோக்கு ஒஸ்கார் விருது நிராகரிக்கப்படும் போதும் டிகாப்ரியோ மட்டும் அல்ல, அவரின் தீவிர ரசிகர்களும், மற்றவர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால் டிகாப்ரியோக்கு ஒஸ்கார் கொடுங்கள் என்று கூறும் ‘give that man an oscar’ வாசகம் இணையதளத்திலும், சமூகவலைதளங்களிலும் பிரபலமாக மாறியது.
இறுதியாக இன்று ஒஸ்கார் விருதை பெற்றுக்கொண்டு பேசிய டிகாப்ரியோ டாம் ஹார்டி, ‘தி ரெனவன்ட்’ படத்தின் இயக்குனர் அலெஜான்ட்ரோ இனரிட்டு மற்றும் ஒளிப்பதிவாளர் இம்மானுவேல் லூபெஸ்கி மற்றும் இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செஸிக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் அவர் ‘பருவநிலை மாற்றம் என்பது உண்மை. தற்போது அது நடந்துக்கொண்டு இருக்கிறது. பூமியின் மொத்த உயிரினங்களும் ஆபத்தில் உள்ளன. காலம் கடத்துவதை விட்டுவிட்டு, நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்” என்று தெரிவித்தார்.