முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவிடம் ஐந்து கடவுச்சீட்டுகள் இருப்பதாக நிதி குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் இது தொடர்பில் யோஷித போலியான தகவல்களை வழங்கியதாக பொலிஸ் பிரிவு அதிகாரிகள் நேற்று(28) நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
யோஷித ராஜபக்சவிடம் உள்ள 5 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளையும் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வு பிரிவினருடன் ஒப்படைக்குமாறும், அவர் உட்பட வழக்கின் சந்தேக நபர்கள் பங்கு சந்தையில் மேற்கொண்ட முதலீடு பற்றிய அறிக்கை ஒன்றையும் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வினரிடம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் CSN நிறுவனத்தின் தலைவருக்கு உத்தரவிடுமாறு, பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.
CSN தொலைக்காட்சிக்கு சொந்தமானதென கூறப்படும் வெளிக்கள ஒளிபரப்பு வாகனங்கள் மற்றும் 2 சொகுசு மோட்டார் வாகனங்களை குறைந்த விலையில், சுங்க பணம் செலுத்தாமல் கொண்டு வரப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு, சுங்க இயக்குனர் ஜெனருக்கு உத்தரவிடுமாறும், நிதி குற்ற விசாரணை பிரிவு நீதிமன்றில் கோரியுள்ளது.
ராஜபக்ச ஆட்சியின் போது ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட மோஹான் சமரநாயகவினால் உத்தரவிடப்பதற்கமைய CSN தொலைக்காட்சியின் தொடர்பு சாதனங்கள் கொக்காவில் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. எனினும் அதற்கான சட்ட ரீதியான ஒப்பந்தங்கள் இல்லை.
அத்துடன் CSN பாதுகாப்பு அமைப்பு என்ற பெயர் கொண்ட கணக்கில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கோபுரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கான பணத்தை செலுத்த முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் அந்த கணக்கிற்கு பணம் கிடைத்துள்ள முறை தொடர்பில் தெளிவான தகவல் இல்லாமையனால், அந்த கணக்கிற்கு பணம் கிடைத்துள்ள முறை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறும் பொலிஸ் நிதி குற்ற விசாரணை, பிரிவு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.
அவசியமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகுவதற்கு சந்தேக நபர்கள் நீதிமன்றில் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் எதிர்வரும் மே மாதம் 3ம் திகதியில் இருந்து இரண்டு வாரத்திற்கு கொழும்பு கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு சென்று வாக்குமூலம் வழங்குமாறும் கடுவெல பதில் நீதவான் யோஷித ராஜபக்ச மற்றும் நிஷாந்த ரணதுங்க CSN தொலைக்காட்சியின் நிதி மோசடி வழக்கிற்கு தொடர்புடைய ஐவருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
மே மாதம் 5ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ள நிலையில் அறிவிக்கும் போது நீதிமன்றில் ஆஜராகுமாறு சந்தேகநபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது