யேமனில் ஏறக்குறைய 50 லட்சம் குழந்தைகள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக ‘சேவ் த சில்ரன்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
யேமனில் நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலை மற்றும் யேமன் நாட்டு நாணயத்தின் வீழ்ச்சி ஆகியவற்றால் மக்கள் உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது மொத்தம் 52 லட்சம் குழந்தைகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, யேமனில் முக்கிய துறைமுக நகரமான ஹூடேடாவில் மோதல் நடந்து வரும் நிலையில், கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிகளுக்கு நுழைவாயிலாக அமைந்துள்ள இந்த நகருக்கு உணவுப் பொருட்கள் வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
”தங்களுக்கு அடுத்த வேளை உணவு எப்போது கிடைக்கும் என்று பல மில்லியன் குழந்தைகளுக்கு தெரியாத நிலை உள்ளது” என்று “சேவ் த சில்ரன்” அமைப்பின் தலைமை நிர்வாகியான ஹெல டார்னிங் ஸ்மிட் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒரு மருத்துவமனையில், குழந்தைகள் அழுவதற்குக்கூட வலுவில்லாமல் இருந்தனர். அவர்களது உடல் வலுவை பசி தின்றுவிட்டது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யேமனில் தொடர்ந்து நடந்துவரும் மோதல்களில் ஏறக்குறைய 10,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 55 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. அமைப்பு முன்னதாக தெரிவித்திருந்தது.