‘The Hindu’ ஊடகத்தினால் நடத்தப்படும், இரண்டு நாள் கருத்தரங்கில் பங்கேற்க, இந்தியா – பெங்களூர் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, இந்தியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகௌடாவையும், கர்நாடக மாநில துணை முதல்வர் பரமேஸ்வரையும், அவர்களின் இல்லங்களுக்குச் சென்று நேற்று(10) மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
தேவகௌடாவுடனான சந்திப்பின் போது, விரைவில் இரண்டு நாடுகளிலும் நடைபெறவுள்ள தேர்தல்கள், அரசியல் சூழ்நிலைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கருத்தரங்கில் இரண்டாவது நாளான இன்று(11) சிறப்புரையாற்ற வந்த இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவையும், மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துப் பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்புகளில், மஹிந்த ராஜபக்ஷவுடன் நாமல் ராஜபக்ஷ , ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, டலஸ் அழகப்பெரும உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


