
கண்டியில் முதன்முறையாக சஞ்சாரியின் ‘சௌந்தர்யம்’ நிகழ்வு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கலைகள் மனிதனை வாழ்விப்பவை அந்தவகையில் எம் ஒவ்வொருவரது படைப்பும் எம் வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையிலே அமைகிறது. ஆனால் எமக்கான மேடையை நாமே உருவாக்க எமது கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டிய தேவை உணரப்படுகிறது.
அந்தவகையில் சஞ்சாரியின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டத்தில் உள்ள மூவினத்தைச் சேர்ந்த கலைஞர்கள், சிரேஷ்ட கலைஞர்கள் மற்றும் வளர்ந்து வருகின்ற இளம் கலைஞர்களுக்கிடையிலான ‘சௌந்தர்யம்;’ நிகழ்வு நேற்று கண்டியில் இடம்பெற்றது.
கண்டி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி பாரத் அருள்சாமி அவர்களின் தலைமையிலும் அனுசரனையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் கண்டி மாவட்டத்தில் உள்ள கலைஞர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் மற்றும் கலைத்துறையின் முன்னேற்றம் , தற்போதைய நிலை குறித்தான பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது சட்டத்தரணி பாரத் அருள்சாமியின் கலை கலாசார மேம்பாட்டுத் திட்டம் ஒன்றும் முன்வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலைஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் , சிரேஷ்ட கலைஞர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்விற்கு அழகு சேர்க்கும் முகமாக கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
பவதாரணி ராஜசிங்கத்தின் சஞ்சாரி ஏற்பாடு செய்த இந்நிகழ்வு நூற்றுக்கணக்கான கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் கண்டி மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.