(ஃபாஸ்ட் நியூஸ் | பங்களாதேஷ்) – ஐபிஎல் நடைபெறும் சமயத்தில் இலங்கையுடன் பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது.
ஐபிஎல் 14ஆவது சீசன் நடைபெறும் சமயத்தில் இலங்கை அணியுடன் பங்களாதேஷ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஷாகிப் அல் ஹசன், எனக்கு ஐபிஎல் தொடர்தான் முக்கியம். டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் பத்திரிகை ஒன்றுக்கு விளக்கமாகப் பேசிய அவர்;
“ஐபிஎல் நடைபெறும் சமயத்தில், இலங்கை சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாட பங்களாதேஷ் அணி முடிவு செய்துள்ளது. இதில் நான் பங்கேற்க விரும்பவில்லை. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ளது. நாங்கள் கடைசி இடத்தில் இருக்கிறோம். இனி வெற்றிபெற்றாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை”
“அந்த நேரத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்றால், அடுத்து வரும் டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக முடியும். ஐபிஎல் நடைபெறும் மைதானங்களில்தான் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. வேறு எந்த பங்களாதேஷ் வீரருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது. பல்வேறு நாட்டு வீரர்களை அந்த மைதானத்தில் சந்திக்கும்போது நிச்சயம் நல்ல அனுபவம் கிடைக்கும். அதைவைத்து டி20 உலகக் கோப்பையில் என்னால் சிறப்பாக விளையாட முடியும்”
“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்துபோன கதை. டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகுவதுதான் சிறந்த முடிவாக இருக்கும். பணத்திற்கு ஆசைப்பட்டுத்தான் ஐபிஎலில் விளையாடப் போகிறேன் என சிலர் கூறலாம். அது ஏற்புடைய கருத்து அல்ல. டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முடிவை எடுத்து, வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்குக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன்” என்றார்.