முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மூன்று வழக்குகளை தொடர்ந்தும் விசாரிப்பதா அல்லது கைவிடுவதா என்பதை தீர்மானிக்க கால அவகாசம் வழங்குமாறு இலஞ்ச ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.
சொத்து விபரங்களை சரியாக முன்வைக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு இந்த வழக்குகளை தாக்கல் செய்திருந்தது.
குறித்த இந்த வழக்குகள் இன்று(21) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது ஷிராணி பண்டாரநாயக்க நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இந்த வழக்குகளை தொடர்ந்தும் நடத்த முடியாது என்பதால், தமது தரப்பு வாதியை விடுவிக்குமாறு ஷிராணி பண்டாரநாயக்கவின் சட்டத்தரணிகள் கோரியுள்ளதாக ஆணைக்குழுவின் சார்பில் ஆஜராக சட்டத்தரணி நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், இந்த கோரிக்கை குறித்து ஆராய கால அவகாசம் வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய வழக்கு விசாரணைகளை ஜனவரி 21 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அன்றைய தினம் முடிவை அறிவிக்குமாறும் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.